திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்ட விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருவெள்ளறை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு தினமும் காலையில் பெருமாள்-தாயார் மண்டகப்படிகளுக்கு சென்று வருகின்றார். மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி

அளித்தார். தேர்த்திருவிழாவை முன்னிட்டு 4 ம் நாள் பெருமாள் கருட வாகனத்திலும்,7 ம் நாள் பூந்தேரிலும், 8 ம் நாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளியும் நடைப்பெற்று திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. திருத்தேரில் பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டு பிடித்து ரெங்கா ரெங்கா, கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மேலும் தேரோட்ட விழாவை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி பெருமாளை தரிசனம் செய்தனர். திருவிழாவை காண வந்த பக்தர்கள் பொதுமக்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு வழங்கினர். குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கோயில் முன்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் புறக்காவல் நிலையம் அமைத்து ஜீயபுரம் டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளை 19-ந் தேதி இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. இந்தவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் திருவெள்ளறை கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.