Skip to content
Home » ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

  • by Senthil

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.  ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தூய அடைக்கல அன்னை தேவாலய திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 2ம் தேதி நடத்த கிராம மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி  நடத்தும் விழா குழுவினர் மாவட்ட நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு வாடிவாசல் அமைத்தல் பார்வையாளர் மாடம் அமைத்தல் மேடை அமைத்தல் தடுப்பு வேலிகள் மாடுகள் வெளிவரும் இடத்தில் பேரிக்காடுகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முழு‌ வீச்சில் செய்து வந்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முன்கூட்டியே அனுமதி கேட்கப்படாததால் அரசிடம் இருந்து ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ம் தேதி நடத்துவதற்கு அனுமதி கிடைக்காததால் ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் இன்று 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நடத்த நேற்று காலை தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் தச்சங்குறிச்சி மக்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

மேலும் ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து பணிகளும் அங்கு முடிவடைந்த நிலையில் போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும் தச்சங்குறிச்சிக்கு வந்து இறங்கியது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் நேற்று இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டியும் மாடுகள் வெளியே வரக்கூடிய கலெக்ஷன் பாயிண்ட் முறையாக அமைக்கவில்லை தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு முறையாக நடத்த வேண்டும் அப்படி நடத்தினால்தான் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு தடையின்றி பாதுகாப்பாக நடைபெறும் அதனால் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்துவிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று கூறி தற்காலிகமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்தி வைப்பதாகவும் பணி முடித்த பிறகு ஜல்லிக்கட்டு குழுவினர் எந்த தேதியில் அனுமதி கேட்கின்றார்களோ அந்த தேதியில் அனுமதி வழங்கப்படும் என்று கூறி ஜல்லிக்கட்டை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தச்சங்குறிச்சி கிராம மக்களும் ஜல்லிக்கட்டு விழா குழுவினரும் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் வாகனத்தை முற்றுகையிட்டு குறிப்பிட்ட நாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது அரசாணை தாமதமாகவே வெளிவந்தது அப்படி இருந்தும் முழுமையாக பணியை முடித்து உள்ளோம் ஏற்கனவே இரண்டாம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதாக இருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை தற்போது 6ம் தேதி நடத்திக் கொள்ள அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்து வைப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

அதனால் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று நடத்த வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நள்ளிரவில் கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை குறிப்பிட நாளில் நடத்த வேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவியது. இதனை அடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுபவர்களிடம் போலீசாரும் வருவாய் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடித்த பிறகு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் கிராம மக்களும் ஜல்லிக்கட்டு விழா குழுவினரும் எந்த தேதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்கிறீர்களோ அந்த தேதியில் வழங்கப்படும் என்றும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பணி முழுமையாக முடிவடையாததால் தற்காலிகமாக ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கிளம்பி சென்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்6ம்தேதி  ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்றால் வேறு எந்த தேதியிலும் நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் குறிபிட்ட நாளில் இன்றே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்
என்று தெரிவித்து கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் நள்ளிரவு 1:40 மணி வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தச்சங்குறிச்சியில் தமிழகத்திலேயே ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்ப்பில் இரண்டாம் தேதியே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காத்திருந்த நிலையில் அன்று அனுமதி கிடைக்காததால் ஆறாம் தேதி நடைபெறும் என்று அரசாணை வெளியிட்ட நிலையில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்ப்பிலிருந்த நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகள் முழுமை பெறவில்லை என்று கூறி பாதுகாப்பு நலன் கருதி ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தச்சங்குறிச்சி கிராம மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!