Skip to content
Home » தஞ்சைஅருகே…..பாட்டியை கொன்று அண்டாவில் அமுக்கிய பேத்தி கைது….

தஞ்சைஅருகே…..பாட்டியை கொன்று அண்டாவில் அமுக்கிய பேத்தி கைது….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி செல்வமணி (55)  சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார்கள். மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

செல்வமணி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். கடந்த 24ம் தேதி திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக அக்கம் பக்கத்தினரிடம் செல்வமணி கூறியுள்ளார். அதன் பிறகு நேற்றுமுன்தினம் வரை செல்வமணி வீடு பூட்டி கிடந்துள்ளது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர், செல்வமணி மகள் ராஜலட்சுமிக்கு தகவல் அளித்தனர். ராஜலட்சுமி நேற்றுமுன்தினம் மாலை வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்து கடுமையாக துர்நாற்றம் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜலட்சுமி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது செல்வமணி பித்தளை அண்டாவில்  தலை கீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில்  பிணமாக  கிடந்தார். இது குறித்து பாபநாசம் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், செல்வமணி உடலை மீட்டு, விசாரணை நடத்தினர்.

குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, செல்வமணியின் பேத்தியான வீரசிங்கம்பேட்டை ரமேஷ் மனைவி ஜெயலட்சுமி (28) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரிடமிருந்து பல்வேறு தடயங்கள் சிக்கின. இதை தொடர்ந்து போலீசார் ஜெயலட்சுமியை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட  செல்வமணியின்  மகள் கீதா வெளிநாட்டில் உள்ளார். கீதா தனது தாய்க்கு மாதந்தோறும் பணம் அனுப்புவாராம். இதையறிந்த, கீதாவின் மகளான ஜெயலட்சுமி, தனது பாட்டி செல்வமணியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில், இவருக்கும் கடந்த 23ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி தனது பாட்டி செல்வமணியை கீழே தள்ளியுள்ளார்.

இதில் அடிப்பட்டு செல்வமணியின் தலையில் ரத்தம் வந்துள்ளது. இருப்பினும் செல்வமணியை அவரது சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து,  உடலை பித்தளை  அண்டாவுக்குள் திணித்து வைத்துவிட்டு   ஜெயலட்சுமி  அங்கிருந்து போய் விட்டார்.

பாட்டியை கொலை செய்த பின்னர் ஜெயலட்சுமி ஒன்றும் தெரியாதவர் போல் பிரேதத்தை அப்புறப்படுத்தும் பொழுது சொந்தக்காரர்களுடன் சேர்ந்து கதறி அழுது, ஒப்பாரி வைத்து நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!