Skip to content
Home » இரட்டை இலை சின்னம் …. தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது தேர்தல் கமிஷன்

இரட்டை இலை சின்னம் …. தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது தேர்தல் கமிஷன்

முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே அ.தி.மு.க.வை ஒற்றை தலைமையாக நிர்வகிப்பதில் போட்டி நிலவி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் இரு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஒரே கட்சியில் 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால் இரட்டை இலை சின்னம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. தங்களது அணிக்கே இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவின் அடிப்படையில் வேட்பாளரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும், இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள குறிப்பிட்ட நபர்களும் பங்கேற்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் வேட்பாளரை அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், தேர்தல் ஆணையத்துக்கு உரிய ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது.

இதன் அடிப்படையில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வேட்பாளர் தேர்வு தொடர்பான ஒப்புதல் படிவங்கள் அனுப்பப்பட்டன. அவற்றை சேகரித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று டில்லி எடுத்து சென்றார். அங்கு சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. வக்கீல் இன்பதுரை உள்ளிட்டோருடன் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம், பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை ஆராய்ந்து, அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு புதிய அதிகாரத்தை வழங்கி உள்ளது. அதாவது அ.தி.மு.க. வேட்பாளருக்கான ஏ, பி படிவங்களில் கையெழுத்திட அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.

இது தமிழ்மகன் உசேனுக்கு குறுகிய கால அதிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவின் வேட்பு மனு தாக்கலுக்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திடுகிறார். இதனையடுத்து இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.  அவருக்கு இரட்டை இலை சின்னம் உறுதியாகிவிட்டது. வேட்பு மனுவை வாபஸ் பெற 10-ந்தேதி இறுதி நாள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!