தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி, ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது’ என்ற வாக்கியத்தையும் ஆளுநர் தவிர்த்துள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் செயலை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டித்துள்ளன. ஆளுநர் உரையைத் தொடர்ந்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது என்றும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், ஆளுநர் உரையை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார். ஆளுநர் அவையில் இருக்கும்போது அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது மரபல்ல என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் உரை. ஒப்புதல் அளித்துவிட்டு பேரவையில் மாற்றி வாசிப்பது ஏற்கத்தக்கதல்ல. தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக, அவை நடவடிக்கைகள் முடியும் முன்னரே ஆளுநர் வெளியேறியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரையே ஆளுநர் உச்சரிக்கவில்லை என்பது வேதனையான விஷயம். திராவிட மாடல் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பல பிரச்சனைகள உருவாக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. இந்திய அரசிலமைப்பின்படி நமது மாநிலத்திற்கு தலைவர் அவர்தான். அவர் நமக்கு முன்மாதிரியாக நடக்க வேண்டும். இதுபோன்று பல சமயங்களில் அவர் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டிருக்கிறார். இதை வேதனையுடன் விமர்சனமாகவே சொல்கிறேன். இதை அவர் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆளுநர் உரையை ஒப்புதலுக்காக அவருக்கு கடந்த 5ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அவர் 7ம் தேதி ஒப்புதல் அளித்துவிட்டார். அப்போதே ‘இதில் சில வார்த்தைகள் உடன்பாடில்லை மாற்றுங்கள்’ என்று கூறினால், முதல்வரும், அரசாங்கமும் அதற்கேற்ப முடிவு எடுத்திருக்கும். அதையெல்லாம் செய்யாமல், பொது மேடையில் பேசுவதுபோல் பேசுவது நாகரிகம் அல்ல. அதேபோல் பாராளுமன்ற ஜனநாயகத்தின்படிதான் நாம் நடக்கிறோம். பாராளுமன்றத்தில் மத்திய அரசால் எழுதிக்கொடுக்கும் உரையைத்தான் ஜனாதிபதி வாசிக்கிறார். ஒரு வார்த்தை மாறாமல் அப்படியே வாசிக்கிறார். மசோதாக்களுக்கும் தாமதம் இன்றி ஒப்புதல் அளிக்கிறார். ஆனால் தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக பதில் அளிப்பதில்லை, ஏன் இப்படி நடக்கிறது என தெரியவில்லை. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் எதற்காக இதுபோன்று நடந்துகொள்கிறார்கள் என தெரியவில்லை. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.