Skip to content
Home » ஆசைக்கு இணங்கினால் தான் குழந்தை கிடைக்கும்…. பெண்ணிடம் சாமியார் அத்துமீறல்

ஆசைக்கு இணங்கினால் தான் குழந்தை கிடைக்கும்…. பெண்ணிடம் சாமியார் அத்துமீறல்

கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:எனக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நானும், எனது கணவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தோம். திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் நாங்கள் கோவில், கோவிலாக சென்று வந்தோம்.

அப்போது மத்திய பிரதேசத்தில் ஆசிரமம் நடத்தி வரும் ஒரு சாமியார் பற்றி எனது கணவர் அறிந்தார். அவரை சந்தித்து எங்களுக்கு குழந்தை இல்லாத விவரத்தை தெரிவித்துள்ளார்.

அந்த சாமியார் சொன்னபடி எனது கணவர் வீட்டுக்கு வந்து இரவு நேரங்களில் பூஜைகளை நடத்தினார். ஆக்ரோஷமாக இருந்த அந்த பூஜைகளை பார்த்து நான் அச்சம் கொண்டேன். சாமியார் இப்படித்தான் பூஜைகளை செய்யச் சொன்னார் என்று கூறி எனது கணவர் தெரிவித்து என்னை சமாளித்தார்.

இந்தநிலையில் சாமியார் பெங்களூர் வந்திருந்தார். அவரை பார்க்க எனது கணவர் என்னை அழைத்துச் சென்றார். அங்கு தனி அறைக்கு வரச்சொன்ன சாமியார், அவருடைய ஆசைக்கு என்னை இணங்குமாறு கூறினார். அப்போது தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என தெரிவித்தார். நான் மறுப்பு தெரிவித்து வெளியே வந்து விட்டேன். இதுபற்றி கணவரிடம் தெரிவித்தேன். அவரோ எந்தவித கோபமும் கொள்ளாமல் சாமியார் சொல்படி நடந்து கொள் என தெரிவித்தார்.

எனது கணவரின் தோழி ஒருவரும் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு சாமியார் சொல்வதை கேட்கும்படி கூறினார். ஆனால் யார் சொல்லையும் நான் கேட்கவில்லை. அதன்பிறகு நான் எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். சில மாதங்கள் கழித்து ஐதராபாத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றேன். ஆனால் கணவர் என்னை வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டார். சாமியார் உன்னுடன் வாழ கூடாது என கூறி இருப்பதாக தெரிவித்து என்னுடன் பேச மறுத்தார்.

அந்த சமயம் சாமியார் என்னை தொடர்பு கொண்டு எனது ஆசைக்கு இணங்கினால் தான் உன் கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்வேன்  என மிரட்டினார். ஆசைக்கு இணங்காததால் அந்த சாமியார் எனது வாழ்க்கையே அழித்து விட்டார். எனவே அந்த சாமியார், எனது கணவர், கணவரின் தோழி ஆகியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் மனுவில் கூறியிருந்தார். அந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் கிழக்கு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள விவரம் தெரியவந்தது. மேலும் புகார் மனுவில் அந்த பெண் கூறியுள்ள விவரங்கள் உண்மை தானா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!