தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா(35) எம்.காம். பட்டதாரியான இவர் சுற்றுசூழல் குறித்து பி.எச்.டி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 15ம் தேதி சஞ்சய் கெளதம் தலைமையிலான 11 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் டில்லியில் இருந்து பூண்டிதோப்பில் உள்ள விக்டர் ஜேம்ஸ் ராஜா வீட்டுக்கு வந்தனர்.
தூங்கிகொண்டிருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை தட்டி எழுப்பி விசாரணையை தொடங்கினர்.இந்த தகவல் சிறிது நேரத்தில் அக்கம் பக்கம் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை தஞ்சையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகைக்கு கொண்டு வந்து 2 நாள் விசாரணை மேற்கொண்டனர்.
பிரதமர் அலுவலகத்துக்கு, ஜேம்ஸ் ராஜா பல மெயில்கள் அனுப்பியதாகவும், அதில் பிரதமர் பற்றி அவதூறு பரப்பியதாகவும் அதனால் சிபிஐ அதிகாரிகள் வந்து விசாரிப்பதாக கூறப்பட்டது. இப்போது இந்த வழக்கு விசாரணையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
விக்டர் ஜேம்ஸ் ராஜா சிறுமிகளை ஆபாச படம் எடுத்து இணையத்தில் தொழில் முறையாக பதிவேற்றம் செய்ததோடு சீரியல் குற்றங்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது 67B IT Act, pocso Act 2012 – sec 4,6,8,10,12,14 and 17, மற்றும் 120b of IPC act ஆகிய பிரிவுகளில் வழக்கு (இணையவழி தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவு) வழக்குப்பதிவு செய்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கைது செய்தனர்.
பின்னர் அவரை தஞ்சை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்த கொண்டு வந்தனர். ஜேம்ஸ் ராஜாவுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.