சென்னையை அடுத்த ஆவடி விவேகானந்தா நகர், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் (60). இவர், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். 2014-ம் ஆண்டு ஜாஸ்மின், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 பேர்களிடம் தீபாவளி மளிகை சீட்டுக்கு ரூ.50 லட்சம் வரை வசூல் செய்து மோசடி செய்தாக புகார் எழுந்தது. மேலும் அவர் சக ஆசிரியை உஷா என்பவரிடம் கடனாக ரூ.6 லட்சம் வாங்கி அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2015-ம் ஆண்டு ஜாஸ்மினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் பண மோசடி செய்த ஜாஸ்மினுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.37.47 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.