Skip to content
Home » காஷ்மீரில் நுழைந்தார் ராகுல்…இறுதிகட்டத்தை எட்டிய யாத்திரை…

காஷ்மீரில் நுழைந்தார் ராகுல்…இறுதிகட்டத்தை எட்டிய யாத்திரை…

  • by Senthil

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக பாதயாத்திரை சென்றார். பஞ்சாப்பில் நடந்து வந்த பாத யாத்திரை நேற்று நிறைவு பெற்றது.
அங்கிருந்து லகன்பூர் எல்லை வழியாக காஷ்மீருக்குள் ராகுல்காந்தி நுழைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராகுல்காந்தி இன்று தனது யாத்திரையை காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டம் ஹட்லி மோர் என்ற இடத்தில் இருந்து யாத்திரையை துவக்கினார். ராகுல்காந்தி வெள்ளை நிற டி.சர்ட்டுக்கு மேல் கருப்பு கோட் அணிந்திருந்தார். யாத்திரை காலை 7 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக 1¼ மணி நேரம் தாமதமாக யாத்திரை தொடங்கியது. பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைவர் விகார் ரசூல்வானி, சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் நடந்து சென்றனர். காஷ்மீரில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடங்கியதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 30ம் தேதி முடிவடைகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!