விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவால் சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அனுபவித்த ருசி கண்ட பூனை ஓபிஎஸ். இன்று தன்னையும் தன் குடும்ப சொத்துக்களையும் பாதுகாக்க அதிமுகவை குறை சொல்லிக்கொண்டு வருகிறார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் தோல்வி குறித்து ஓபிஎஸ் விமர்சிக்கிறார். கடந்த 2021 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சொந்த பகுதியான தேனியில் ஒரே தொகுதியில் மட்டுமே பன்னீர்செல்வத்தால் வெற்றி பெற முடிந்தது. பல்வேறு பதவிகளை வைத்துக்கொண்டு அவர் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. பிற தொகுதிகளில் ஜெயிக்க அருகதையற்றவருக்கு அதிமுகவை குறை சொல்ல தகுதி இல்லை.