ஆன்லைன் ரம்மி தடை தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த 41 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாளுக்குள் நாள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மிகவும் கனத்த இதயத்துடன் தான் சட்டமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னரே தடை மசோதா கொண்டு வரப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து 10,735 மின்னஞ்சல் பெறப்பட்டன. ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு
தலைமையில் குழு அமைத்தோம். தடை மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கம் 24 மணி நேரத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தால் மாணவர்களின் படைப்பாற்றல் பாதிப்பதாக 74 சதவீதம் ஆசிரியர்கள் கருத்து கூறியிருந்தனர்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை 131 நாட்களுக்கு பின் கவர்னர் திருப்பி அனுப்பினார். சட்ட ஒழுங்கைப் பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், மாநில அரசின் மிக முக்கியமான கடமை. மாநில எல்லைக்குள் மக்கள் அனைவரையும் காக்க, மாநில அரசுக்கு உரிமை உண்டு. மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவை, மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும். இதயமுள்ளவர்கள் யாரும், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அறிவால் உருவக்கப்பட்ட சட்டம் அல்ல; இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்களும் இந்த மசோதா குறித்து பேசினர். தவாக தலைவர் வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன்(கொமுதேக), நயினார் நாகேந்திரன்(பாஜக), ஜி.கே. மணி(பாமக), செல்வபெருந்தகை(காங்), தளவாய்சுந்தரம்(அதிமுக), ஓ.பன்னீர்செல்வம்(அதிமுக) மற்றும் மதிமுக, கம்யூனிஸ்ட்கள் உள்பட அனைவரும் இந்த தீர்மானத்தை வரவேற்று பேசினர்.
கட்சிக்கு ஒருவர் என பேசும்போது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த அடிப்படையில் அதிமுக சார்பில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது, அவை சுமூகமாக நடந்து கொண்டிருக்கும்போது, ஏன் வேண்டுமென்றே பிரச்னையை கிளப்புகிறீர்கள் என சபாநாயகரை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேட்டார்.அதைத்தொடர்ந்து அதிமுகவினர் கூச்சல் போட்டனர். இதனால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
அதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர், மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது, இதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. தவறான நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்றார். சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.