Skip to content
Home » ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக  இருந்த காங்கிரஸ் கட்சியை சோ்ந்த திருமகன் ஈவெரா  ஜனவரி 4ம் தேதி காலமானார்.   இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தேர்தல் நடைமுறை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள்.

தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக  மேனகா நவநீதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த அணிகளின் சார்பிலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க.வை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் எந்த அணிக்கு ஆதரவு அல்லது தனித்து போட்டியிடுவதா? என்ற நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

தே.மு.தி.க. வேட்பாளராக ஆனந்த், அ.ம.மு.க. வேட்பாளராக சிவபிராந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். பா.ம.க.வும், சமத்துவ மக்கள் கட்சியும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு கிடையாது என்றும் அறிவித்து உள்ளன.

இந்தநிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை)  காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஈரோடு மாநகராட்சி  ஆணையர் சிவக்குமார் தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு செல்லும் வழிகள் சுவற்றில் ஒட்டப்பட்டன. மேலும், 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகளும் வரையப்பட்டன. தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகிற 3-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆனந்த் நாளை மறுநாளும் (புதன்கிழமை), அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் 3-ந் தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். வருகிற 7-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 8-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படுகிறது. 10-ந் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது.

மனுதாக்கல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறியதாவது:

வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். மனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.5 ஆயிரமும் டெபாசிட் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!