மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
விடுதலைக்குப் பிறகு நமதுநாட்டில் வரலாற்றில் என்றும் கண்டிறாத மிகமோசமான சூழல் நிலவுகிறது. எழுதப்படாத சட்டத்தை மோடி தலைமையிலான ஆட்சி செயல்படுத்துகிறது. உண்மையை சொல்லாதே. உண்மையை சொன்னால் நாங்கள் அதனை ஏற்கமாட்டோம். நடவடிக்கை எடுப்போம்.
கைது செய்வோம். சிறையில் அடைப்போம் என்று மோடி தலைமையிலான மத்திய ஆட்சி செயல்படுகிறது. அவர்கள் தேர்தல் நேரத்தில் அளித்த தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பு, கருப்புபணம் மீட்புபோன்ற வாக்குறுதிகளை நினைவுபடுத்தக்கூடாது. அதனை கேட்டதன் எதிரொலிதான் 2019ம் ஆண்டு லோகச்பா தேர்தல் பரப்புரையின் போது ராகுல்காந்தி பேசியதற்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டு பதவி பறிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் அதானிக்கும், மோடிக்கும் உறவு என்ன, எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தொழில் தொடங்கப்பட்டது என்று அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் எழுப்பினார்.
ஜவகர்லால்நேரு முதல் மன்மோகன்சிங் வரை எல்லா பிரதமரும் தொழில் அதிபர்களோடு உறவாகத்தான் இருப்பார்கள். மாநில முதல்வர்களும் உறவாகத்தான் இருப்பார்கள். தொழில்முதலீட்டு மாநாடு நடத்துவார்கள். ஒரு நாட்டின் பிரதமர் ஒரு பெரும்முதலாளிக்கு ஏஜெண்டாக இருப்பது பெரும் அநீதி. அதானி என்கின்ற ஒற்றை நபருக்கு ஏஜெண்டாக செயல்பட்டு நாட்டை அடகுவைத்துவிட்டார். பல ஆயிரம்கோடி கொள்ளை அடித்தது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டுமென்று விசாரிக்க வலியுறுத்தினார். அதில் என்ன தவறு. ஒரு நபரை காப்பாற்ற நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் மோடி செயல்படுகிறார்.
மோடி பாசிசபாதையில் செல்கிறார். பாசிசபாதையில் சென்றவர்கள் தோற்றுபோனார்கள். அந்தநிலையைத்தான் மோடி மேற்கொண்டிருக்கிறார். இது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் மிக மிக ஆபத்தானது.
ராகுல் பதவி பறிப்பை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைத்து கட்சியினரும் ஒற்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் அதனை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலங்களில் 66 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. வாஜ்பாய் காலத்தில் 17 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் மோடி ஆட்சிக்காலத்தில் 23 பொதுத்துறை நிறுவனங்களை அதானிபோன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.