மராட்டியத்தின் மும்பை நகரில் மாடல் அழகி மற்றும் நடிகையான ஒருவர் (27) போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் அவர் கூறியதாவது…. அவரது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை தொடங்கி, அதன் வழியே அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகாத செய்திகள், வீடியோக்களை அனுப்பி அவதூறு ஏற்படுத்திள்ளனர். வேறு சில சமூக ஊடகங்கள் வழியேயும் அவதூறு பரப்பப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜ்புத் கர்ணி சேனா அமைப்பின் துணை தலைவர் சுர்ஜீத் சிங் ரத்தோர் ( 27) இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை மும்பை, அந்தேரி மேற்கு பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நடிகைக்கு பாலியல் தொல்லை, தகாத செயல், துன்புறுத்தல் மற்றும் அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எஸ்.எஸ்.ஆர் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவன மேலாண் இயக்குனராகவும் செயல்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது. 2021-ம் ஆண்டில் இருந்து புகார் அளித்த நடிகையுடன் இன்ஸ்டாகிராம் வழியே தொடர்பு கொள்ள தொடங்கி உள்ளார். இதுபற்றி நடிகை அளித்த வாக்குமூலத்தில், சுர்ஜீத் ரத்தோர், தன்னை காதலிக்கிறேன் என கூறினார். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, திரை துறையில் எப்படி பணி செய்கிறாய் என பார்ப்போம் என்று கூறி துன்புறுத்த தொடங்கினார். போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி, ஆபாச செய்திகளை அனுப்பினார் என தெரிவித்துள்ளார். அவரை காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.