Skip to content
Home » மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீன பட்டணப்பிரவேசம் பிரமாண்டமாக நடைபெற்றது…

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீன பட்டணப்பிரவேசம் பிரமாண்டமாக நடைபெற்றது…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டது, பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம். ஆதீன குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 10-ஆம் திருநாளாக நேற்றிரவு இரவு சிகர விழாவான புகழ்வாய்ந்த ஆதீனகர்த்தரின் பட்டணப் பிரவேசம் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, 10, 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பாக சமயப் பணியாற்றிய 10 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் 1 லட்சம் ரூபாயை அருட்கொடையாக வழங்கி ஆசி வழங்கினார்.  பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் 10 விரல்களில் வைரமோதிரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ 20க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார். தொடர்ந்து, பல்லக்கின் முன்னே 10 ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன், வானவேடிக்கை முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது. வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். புகழ்வாய்ந்த பட்டணப்பிரவேசவிழாவால் வாழைமரங்கள், கரும்புகளால் ஆன தோரணவாயில் அமைக்கப்பட்டு மின்னோளியால் கிராமம் விழாக்கோலம் பூண்டது. விழாவையொட்டி மயிலாடுதுறை எஸ்பி என்.எஸ்.நிஷா தலைமையில் ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பிகள், 9 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!