Skip to content
Home » திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம்பெண் தற்கொலை…. உறவினர்கள் சாலைமறியல்..

திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம்பெண் தற்கொலை…. உறவினர்கள் சாலைமறியல்..

நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலத்தை சார்ந்தவர் நாகராஜன், இவரது மகள் கீதா ( 24). இவருக்கும், கரூர் மாவட்டம் தும்பிவாடியை சார்ந்த குணசேகரன் மகன் வேலாயுதம் என்கின்ற கெளதமிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பொறியியல் பட்டதாரியான கெளதம் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், கொரனோ கால கட்டமாக இருப்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டதாக கூறி தூரத்து உறவுமுறை பொறியாளர் பெண்ணான கீதாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். 7 பவுன் தங்க நகைக்கள் போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான பிறகு தான் கெளதமிற்கு வேலை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அடிக்கடி பணம் கேட்டு கீதாவை மிரட்டி வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். தும்பிவாடியில் இருந்த அவர்களை வெங்கமேட்டிற்கு வீடு பார்த்து வைத்து தனிக்குடித்தனம்

வைத்து, கீதாவின் தந்தை சிறுக சிறுக 5 லட்ச ரூபாய் வரை பணமாக கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து புன்னம் சத்திரம் கிராமத்திற்கு இடம் பெயர்ந்து சென்றதுடன், அங்கு உணவகம் நடத்தி வந்துள்ளனர். கீதாவின் தங்கை திருமணத்திற்காக ஊருக்கு சென்றவரை அழைத்து வரச் சென்ற கெளதம், 2 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்து விட்டதாகவும், கீதாவை அழைத்துக் கொண்டு புன்னம் சத்திரம் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று இரவு கெளதமின் தம்பி கீதாவின் தாயாருக்கு போன் செய்து உங்கள் மகள் தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளார்.

தகவலறிந்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறியதால் அங்கு வந்து பார்த்த போது பிணவறையில் கீதாவின் உடல் வைக்கப்பட்டிருந்துள்ளது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கீதாவின் கணவர், கணவரின் தந்தை மற்றும் தம்பி உள்ளிட்ட 4 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, கீதாவின் தந்தை அவர்களிடம் என் மகளை தூக்கி கட்டி விட்டீர்களா என கேட்டதற்கு கீதாவின் தந்தையை அவர்கள் 4 பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது. தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் தான் என மகள் உயிரிழந்து இருப்பதாகவும், என்னை தாக்கியவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி கீதாவின் உறவினர்கள் கரூர் திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்யறிந்த வந்த கரூர் நகர துணை காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.உரிய விசாரணை நடத்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!