Skip to content
Home » ஸ்டேடியத்தில் மதுபானம்…. தமிழக அரசின்உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

ஸ்டேடியத்தில் மதுபானம்…. தமிழக அரசின்உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

திருமண  விழாக்கள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என அண்மையில் அரசு அறிவித்து இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதில் திருத்தும் செய்து, சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் சர்வேத கருத்தரங்கில் மட்டும் மதுபானங்கள் விநியோகம் செய்ய அரசு அனுமதி என அறிவிப்பு வெளியானது.

இதில், அரசு முதலில் அறிவித்த திருமண நிகழ்வுகள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என்ற அறிவிப்புக்கு  எதிராக சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீங்கள் தாக்கல் செய்த மனுவில் உள்ள கோரிக்கையை அரசு நீக்கி, திருத்தம் செய்து விட்டதால், புதிய அறிவிப்புக்கு எதிராக தான் வழக்கு தொடர முடியும் என கூறினர்.

இதற்கு பதில் கூறிய மனுதாரர் தரப்பு, நாங்கள் சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு போட்டிகள் என அனைத்துக்கும் சேர்த்து தான் தடை கேட்கிறோம் எனவும், சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு குழந்தைகள் பெண்கள் என அனைவரும் வருவார்கள் ஆதலால், தமிழக அரசின் புதிய அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து மதுபான விநியோகம் செய்யும் அரசின் புதிய திருத்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!