கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் 500 கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைத்து புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை – பாக்கு, பழம், பூ உள்ளிட்ட சீர் வரிசை
பொருட்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சர்க்கரை பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம், மல்லி சாதம், தேங்காய் சாதம் என 5 வகையான கலவை சாதம் மற்றும் கூட்டு பொரியல், வடை, பாயாசத்துடன் கூடிய அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டது.