Skip to content
Home » வெயில் சுட்டெரிக்குது

வெயில் சுட்டெரிக்குது

இந்தியா முழுவதும் கடந்த மாதம் வரை நீடித்த அதிக குளிர் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இந்த முறை கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை  தீவிரமாக அதிகரிக்கும் என்று தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கவில்லை. முக்கியமாக கடந்த இரண்டு நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது

குறிப்பாக நேற்று தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி வரை பதிவானது.  தமிழகத்தில் திருச்சி, மதுரை, வேலூர் போன்ற மாவட்டங்களில் கோடை வெப்பம் 105 டிகிரி வரை பதிவாகும்.

தற்போது அதிகாலையில் குளிர் காணப்பட்டாலும் 10 மணிக்கு மேல் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. மாலை 4 மணிவரை வெயில் கொடுங்கரங்களை நீட்டுகிறது. எனவே பகல்வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.

அதே நேரத்தில் சாலையோர இளநீர் கடைகள், தர்பூசணி கடைகள், மற்றும் குளிர்பான கடைகள் பெருகிவிட்டதை பார்த்தாலே வெயிலின் தாக்கம் நமக்கு புரியும். இது தவிர ஆங்காங்கே நுங்கு விற்பனையும் களைகட்டி வருகிறது.   இளநீர், நுங்கு விலை கடந்த ஆண்டை விட மிகவும் அதிக விலைக்கு விற்றபோதிலும் மக்கள் வெயிலை தணிக்க இளநீர் குடித்து வருகிறார்கள். சாலையோர கடைகளில் குளிர்பானங்கள்  விற்பனையும் சூடுபிடித்து விட்டது.

வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வௌியே வர வேண்டாம் என்றும், குழந்தைகள் , வயதானோர் , கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும், வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவை தினசரி பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் 4ம் தேதி உச்சபட்ச வெயிலான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குகிறது. இந்த வெயில் மே 29வரை நீடிக்கும். இந்த நாட்களில் மழை பெய்தால் வெயிலின் கோரத்தாண்டவம் கட்டுக்குள் வரும். இல்லாவிட்டால் கத்திரிவெயிலின் தாக்கம் முதியோரையும், குழந்தைகளையும் பெரிதும் பாதிக்கும் . எனவே வெயில் நேரத்தில் வெளியே நடமாடாமல் இருப்பதே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!