Skip to content
Home » நியூசியுடன் முதல் டி20….. இந்தியா தோல்வி ஏன்….. கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

நியூசியுடன் முதல் டி20….. இந்தியா தோல்வி ஏன்….. கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார். போட்டி குறித்து அவர் கூறுகையில், இந்த ஆடுகளம் இவ்வாறு இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இரு அணிகளும் மிகவும் ஆச்சரியமடைந்தன. ஆனால், நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது. பழைய பந்தை விட புதிய பந்து அதிகமாக சுழன்றது. பந்தின் சுழற்றியும், பவுன்சரும் எங்களை ஆச்சரியப்படுத்தியது. நானும், சூர்யகுமாரும் பேட்டிங் செய்யும்போது இலக்கை அடைந்துவிடலாம் என நாங்கள் எண்ணினோம்.

பந்துவீச்சின்போது நாங்கள் கூடுதலாக 25 ரன்களை கொடுத்துவிட்டோம். வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்கை பார்க்கும்போது இது இந்தியா – நியூசிலாந்து இடையேயான போட்டியாக இல்லாமல் வாஷிங்டன் சுந்தர் – நியூசிலாந்து இடையேயான போட்டியாக இருந்தது. வாஷிங்டனும், அக்சரும் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்களோ அவ்வாறே தொடர்ந்து செயல்பட்டால் அது இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!