Skip to content
Home » சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தா.பொட்டகொல்லை வடக்கு தெருவைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் நாவரசு (20) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 9 மாதங்களாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை தனிமையில் அழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை நாவரசிடம் கேட்டதற்கு, உன்னையும் உன் பெண்ணையும் வெட்டி கொன்று விடுவேன் என்று அருவாளை காட்டி கொலை மிரட்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தையார் 16.11.2022 அன்று அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் திருமதி.சுமதி அவர்கள் வழக்கை விசாரணை செய்து எதிரியான நாவரசை 16.11.2022 அன்றே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற உத்தரவின் படி ஜெயங்கொண்டம் கிளைச்சறையில் அடைத்தார்கள்.

வழக்கின் எதிரியான நாவரசு வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் மேலும் வாதியின் குடும்பத்தினர் உயிர் மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சுமதி அவர்கள், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாசோமசுந்தரம் அவர்கள் பரிந்துரை செய்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் மேல்பரிந்துரையை ஏற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி இ.ஆ.ப., அவர்கள் எதிரி நாவரசை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்படி நாவரசு 15.12.2022 இன்று காவல்துறையினரால் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். நாவரசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான ஆணை பிரதிகள் மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!