Skip to content
Home » டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ராஜேஷ் தாசை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் இரண்டு முறை அவரது சஸ்பெண்ட் உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடக் கோரி ராஜேஷ் தாஸ், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.  இந்த நிலையில், இந்த வழக்கை விரைந்து முடிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்துக்கு உத்தரவிடக் கோரி ராஜேஷ் தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “எந்த காரணமும் இல்லாமல் தனது சஸ்பெண்ட் உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால், தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய நிர்வாக தீர்ப்பாயம், விசாரணையை தள்ளி வைத்து வருகிறது” என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!