நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார்- ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களது மூன்றரை வயது மகள் சிவதர்ஷினி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, கடந்த 2ஆம் தேதி பெற்றோர் அவரை சிகிச்சைக்காக பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கடந்த 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, சிறுமிக்கு ரத்த வெள்ளை அணுக்கள் குறைவது தெரிய வந்தது.
இதனை அடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி சிவதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நன்செய் இடையாறு கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.