பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும்.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை.
கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
தி.மு.க கூட்டணியை எதிர்க்க கூடிய வகையில் இந்த கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் (தென்னரசு) பலமான, தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பண பலத்தை பயன்படுத்தி எப்பொழுதும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பது தான். எனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
தி.மு.க என்ன செய்தாலும் ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்த போகிறது.இடைத்தேர்தல் என்பது எந்த கட்சியின் பலத்தையும் நிரூபிப்பதற்கானது அல்ல.அ.தி.மு.க ஈ.பி.எஸ் அணி கூட்டணி பெயரை மாற்றி இருப்பது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.