இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் பல உள்ளன. இதில் ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இக்கிராமத்தின் பல பகுதிகளில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதுபற்றி கிராமத்தின் மூதாதையர் எச்சரிக்க தொடங்கினர். அதிகாரிகளும் ஆபத்தான பகுதிகளில் இருந்த மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து ஆபத்தான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற தொடங்கினர். இந்தநிலையில்தான் இங்குள்ள பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. சிங்தார் பகுதியில் உள்ள ஒரு கோவிலும் இடிந்தது. அப்போது கோவிலில் யாரும் இல்லாததால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.
இதுபோல அந்த பகுதியில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழ தொடங்கின. ஜோஷிமத் கிராமத்தில் அடுத்தடுத்து வீடுகள் இடிந்ததும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டதும் மக்களிடையே பீதி கிளம்பியது. மேலும் இக்கிராமம் அடியோடு மண்ணில் புதைந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் புஷ்கர்சிங் தாமி வீடியோ கான்பரன் சிங் மூலம் அப்பகுதி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். மேலும் அங்கு எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார். இதையடுத்து ஜோஷிமத் கிராமத்தில் இருப்போரை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்ல அவர் உத்தரவிட்டார். அதன்படி அங்கு தங்கிஇருந்த 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.