ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் கோடை வாசஸ்தலமாக விளங்குவது சேலம் மாவட்டம் ஏற்காடு. எனவே தான் இந்த நகரை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கிறார்கள். ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து கூட, பலர் வருகின்றனர். அவர்களை வரவேற்பதே, ஏற்காட்டின் நுழைவு பகுதியிலுள்ள படகு இல்ல ஏரிதான்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் படகு சவாரி மிகவும் பிரசித்தம். ஆனால், அந்த ஏரியில், தண்ணீர் தெரியாதபடி, ஆகாயத்தாமரைகள் படர்ந்து கிடக்கிறது.. இது, ஏரிக்கு பச்சைப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனால், படகு சவாரி செய்யும் பரப்பு குறைந்துள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணியர் அவதிப்படுகின்றனர். ஏரியைச்சுற்றி, கரைகளில் அமர்ந்து, தின்பண்டம் சாப்பிடும் சுற்றுலா பயணிகள் , ஏரிக்குள் குப்பையை வீசிவிடுகின்றனர். இதனால், ஏரிக்கரையில் குப்பை அதிகரித்துள்ளது. ஆகாயத்தாமரை, குப்பையை அகற்றி, சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதோடு, ஏரியை புதிய பொலிவு பெறச்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.