சாம்பியன்ஸ் டிராபியன் முதல் அரையிறுதியில் வென்ற இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், 2வது அரையிறுதிப்போட்டி நேற்று பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடந்தது. இதில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதியது.
டாஸ்வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் சேர்த்தது. சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 363 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் பெரிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராஃபியில் அடிக்கப்பட்ட அதிகபட்சமாகவும் நியூசிலாந்து ஸ்கோர் அமைந்தது.
இதையடுத்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, வரும் ஞாயிறன்று (மார்ச் 9) துபாயில் நடக்கும் பைனலில் இந்திய அணியுடன் நியூசிலாந்து மோதுகிறது. ஏற்கனவே ஏ பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவுடன் மோதி தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை சந்திக்கிறது.
நியூசிலாந்து அணி மிகப்பெரிய வெற்றிக்கு ரச்சின் ரவீந்திரா(108), கேன் வில்லியம்ஸன்(102) ஆகியோரின் சதம்தான் முக்கியக் காரணம். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோருக்கு வித்திட்டனர்.
சதம் அடித்து, ஒரு விக்கெட், 2 கேட்சுகளைப் பிடித்த ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் ரவீந்திரா அடிக்கும் 2வது சதமாகும், ஒட்டுமொத்தமாக 5வது சதமாகும். சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்திய அணியை 2வது முறையாக நியூசிலாந்து அணி சந்திக்கிறது. ஏற்கெனவே 2000ம் ஆண்டில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. அதன்பின், 25 ஆண்டுகளுக்குப்பிறகு இந்திய அணியை பைனலில் நியூசிலாந்து சந்திக்கிறது.
ஆனால், 2009ம் ஆண்டில் 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இப்போது, 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் சாம்பியன்ஸ் டிராபியில் 2000-ம் ஆண்டிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் மட்டும்தான் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.
இந்த தொடரில் துபாயில் மட்டுமே ஆடிவரும் இந்தியா, அனைத்து போட்டிகளிலும் வென்று உள்ளது. அதே நேரம் இந்தியா- நியூசிலாந்து இதுவரை ஐசிசி ஒன்டேவில் நேருக்கு நேர் மோதிய 11 போட்டிகளில் இந்தியா 4 போட்டிகளில் வென்றுள்ளது. நியூசிலாந்த 6 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி டிரா. மொத்தத்தில் 9ம் தேதி நடைபெறும் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. எனவே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் துபாய் போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.