நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரிமாதம் தவெக என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 22ம் தேதி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தவெக கொடியை அறிமுகம் செய்தார்.
அடுத்ததாக கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே உள்ள சாலை கிராமத்தில் நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். மக்களவை தேர்தலின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்த இடத்தில் சுமார் 100 ஏக்கர் கொண்ட இடத்தினை தேர்வு செய்து உள்ளார்.அந்த இடத்தில் மாநாடு நடத்துவதற்கான காவல் துறை அனுமதி, பாதுகாப்புக்காக இன்று கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகம் வந்து, ஏடிஎஸ்பி திருமாலிடம் கடிதம் கொடுத்தார்.
மாநாடு செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாடு குறித்த விவரங்களை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் என்றார்.