திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீர வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு திருவெறும்பூர் அருகே கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக் செய்திருந்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார். அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் கொரொடாவுமான மனோகர் ஆகியோர் வந்தபோது, அவர்களை வரவேற்பதற்காகஅதிமுக கட்சியை சேர்ந்த வாழவந்தான் ராஜா என்பவர் வெடி வைத்து உள்ளார்.
அந்த வெடி வெடித்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் வெடி சீறிப்பாய்ந்தது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு பிரபல கண் மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மற்றும் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சுப்பிரமணியனை மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் வெடி விபத்து சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ் கே டி கார்த்திக், ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை, அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் கொறடாவுமான மனோகர், வெடிவைத்த ராஜா உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.