கேரள மாநிலம், வயநாட்டில் ஜூலை 30 – செவ்வாய்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் சூரல்மலா கிராமமே மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும், வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து தேரிய பேரிடர் மீட்பு படை, மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீஸார் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என பலர் ஐந்தாம் நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை அங்கிருந்த ராணுவ அதிகாரிகளுடன் துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் நடிகர் மோகன்லால் பார்வையிட்டார். பின்னர் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறிய நடிகர் மோகன்லால், முண்டக்கையில் சேதமடைந்த பள்ளியை கட்டித்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.