திருச்சி அடுத்த வயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலாலயம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கின.
ரூ.5 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்து வந்தது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது.தொடர்ந்து 15-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. 16-ந்தேதி மாலை முதற்கால யாகபூஜையும், நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாகபூஜையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலை 4-ம் கால யாக பூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும் நடந்தது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
காலை 7.20 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9.15 மணிக்கு சகல விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது திரண்டு இருந்த பல்லாயிகணக்கான மக்கள் “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” என முழக்கமிட்டனர்.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்ததும் புனித நீர் பக்தர்களுக்கு எந்திரங்கள் மூலம் தெளிக்கப்பட்டன. பகல் 12.15 மணிக்கு மேல் மகா அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.
நாளை (வியாழக்கிழமை) முதல் மண்டலாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அறங்காவலா் குழுவினர், திருப்பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கும்பாபிசேக விழாவையொட்டி கோவிலுக்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளிமாவட்டங்களில் இரந்தும் பக்தர்கள் வந்திருந்து கும்பாபிசேக விழாவில் பங்கேற்றனர்.
கும்பாபிசேகத்தை தொடர்ந்து ஆங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது.