தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் செல்வக்குமார், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதன்பிறகு, ஓராண்டு பணி காலம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், அவரின் நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், பல்கலைக்கழக வேந்தரின் பிரதிநிதியாக தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக கழகத்தின் துணைவேந்தரும், பல்லைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) உறுப்பினருமான சசிகலா வஞ்சாரி, அரசு பிரதிநிதியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிசிச்சையியல் இயக்குனரகத்தின் முன்னாள் இயக்குனர் தனபாலன், பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக பேராசிரியர் ராபின்சன் ஜெ.ஜெ.ஆபிரகாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தேடுதல் குழு அமைப்பதற்கான அரசாணையை, தமிழ்நாடு அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. குழுவின் ஒருங்கிணைப்பாளராக, சசிகலா வஞ்சாரி செயல்படுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த தேடுதல் குழு, தகுதியான 3 பேரை தேர்வு செய்யும். இதில், ஒருவரை கவர்னர் தேர்ந்தெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.