Skip to content

குறுவை முன்னேற்பாடு…..டெல்டா மாவட்டங்களுக்கு 1461 டன் யூரியா உரம் அனுப்பிவைப்பு

  • by Authour

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும்.

தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அதன்படி கடந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சில பகுதிகளில் காலதாமதாமாக பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டு விட்டது. ஒரு சில பகுதிகளில் பம்ப் செட் அமைத்துள்ள விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர். இதற்கான நடவுப்பணிகள் முடிந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி அணை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் குறுவை சாகுபடி அதிக அளவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுவை சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரம் மற்றும் இடுபொருட்கள் தேவையான அளவு வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 25 வேகன்களில் 1,461 டன் யூரியா உரம் நேற்று தஞ்சை வந்தது. இந்த உரமூட்டைகள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு  உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேட்டூர் அணை ஜூன் மாதம் திறக்கப்பட்டால் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி  உரம் வழங்கப்பட வேண்டும் என்பதால் பணிகள் மும்முரம் அடைந்து வருகிறது. இந்த உரங்கள் அனைத்தும் தேவையான அளவு கொண்டு வரப்பட்டு கையிருப்பில் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள்  தெரிவித்தனர்.14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!