ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தநிலையில், 2022-ம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய குடிமை பணி தேர்வுகளின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடத்தை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இஷிதா கிஷோர் என்ற பெண் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை நேர்முகத்தேர்வு நடைப்பெற்றது.
முதல் 10 இடங்களை பெற்றவர்கள் விவரம் வருமாறு: இஷிதா கிஷோர், கரிமா லோகியோ, உமா ஹராதீன், ஸ்ம்ரிதி மிஸ்ரா, மயூர் ஹசாரிகா, ஹகானா நவ்யா ஜேம்ஸ், வாசிம் அகமது பட், அனிருத் யாதவ், கனிகா கோயல், ராகுல் ஸ்ரீவஸ்தவா