உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில், சமீப காலமாக ஓநாய்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள 35 கிராமங்களில் மக்கள் பீதியில் உள்ளனர். ஓநாய்கள் தாக்குதலில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, ஓநாய்களை பிடிக்க, ‘ஆப்பரேஷன் பேடியா’ என்ற பெயரில் அதிரடி தேடுதல் வேட்டை நடக்கிறது. இதுவரை நான்கு ஓநாய்கள் பிடிபட்ட நிலையில், மீதமுள்ளவற்றை பிடிக்க வனத்துறையினர் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, பஹ்ரைச் மாவட்டத்தின் ராமப்பூர் கிராம கரும்புக்காட்டில் உள்ள 2 அடி ஆழமுள்ள பதுங்கு குழிகள் அமைத்து ஒநாய்கள் வாழ்ந்துள்ளன. கனமழை காரணமாக, அந்த குழிகளில் தண்ணீர் புகுந்து அவை மூழ்கி 2 ஓநாய் குட்டிகள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 2 குட்டிகள் இறந்துபோனதால் தவித்துப் போன தாய் ஓநாய்கள், தங்களின் குட்டிகளும், இருப்பிடமும் பறிபோனதற்கு மனிதர்களே காரணம் என்று நினைத்து, பழிவாங்கும் நோக்கில் மக்களை வேட்டையாடி வருவதாக உ.பி., வனத்துறை அதிகாரி சஞ்சய் பதக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் .. ‘ஓநாய்களுக்கு பழி வாங்கும் குணம் உண்டு. தங்களுக்கு இன்னல் விளைவிப்பவர்களை அவை பழிவாங்கும் குணம் கொண்டவை. தற்போதைய சம்பவங்களின் பின்னணியில் அது போன்ற காரணமும் இருக்கலாம்’ என்று அவர் கூறியுள்ளார். இந்த தகவல் கிராம மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அச்சுறுத்தி வரும் ஓநாய்களை வனத்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழிக்கு பழி வாங்கும் ஓநாய்கள்.. இது வரை 10 பேர் பலி உபியில் பயங்கரம்..
- by Authour
