திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பாபு (வயது 28).
இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பணம் வசூலிப்பது வழக்கம்.
பக்தர்களை அழைத்துச் செல்வது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில், பாபுவுக்கும்
அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, கணேசன், விநாயகமூர்த்தி, வள்ளி அருணன், அலெக்சாண்டர்,ராமு , அருண், ராஜீவ் காந்தி, லட்சுமணன் ஆகியோருடன் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டு மே மாதம் 6ம் தேதி அங்குள்ள அரசு மதுபான கடை அருகே வைத்து பாபுவை இந்த ஒன்பது பேரும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து பாபுவின் தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் இந்த ஒன்பது பேர் மீதும் சமயபுரம் போலீசார்
5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி சரவணன், வெங்கடாஜலபதி, கணேசன், விநாயகர் மூர்த்தி வள்ளி அண்ணன் ஆகியோர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட அலெக்சாண்டர், ராமு, அருண், ராஜீவ் காந்தி மற்றும் லட்சுமணன் 5 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
