திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழா வெபு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
சோளவள நாட்டின் காவிரி நதிக்கு வடபால் அமைந்துள்ள தேவாரம் பெற்ற ஆலயங்களில் 62 வது ஸ்தலமும் வன்னி வனம் என பெயர் வாய்ந்ததும் அன்னமாம் பொய்கை என்னும் புண்ணிய தீர்த்தத்தை உடையதும் பாலாம்பிகையை மனம் புரிந்த ஈசன் தனது அருள் சக்தி தேவியின் பாதச் சிலம்பின்றும் சிலம்பு நதியை பெறுகச் செய்ததும் ஆன திருவிளையாடல் நிகழ்த்திய புண்ணிய ஸ்தலமாகும்.
இந்நிலையில் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த 24 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும்,மாலையில் உற்சவர் அபிஷேக ஆராதனையும் இரவில் சேஷ,அன்னம்,யானை,முத்துப்பல்லக்கு,கிளி,குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.கடந்த 30 ந்தேதி ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரருக்கு திருக்கல்யான உற்சவம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான வைகாசி தேரோட்ட விழாவில் இன்று காலை 9 மணிக்கு மேல் கடக லக்கனத்தில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள், பக்தர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.