திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடத்தில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்குமிடத்தில் உறங்கும் அறைகள், குடும்பத்துடன் தங்கும் அறைகள், மசாஜ் நாற்காலிகளை கொண்ட ஓய்வறை
ஆடைகள் மாற்ற தனி அறை, மேஜை வசதி, சிற்றுண்டி உணவகம், குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இந்த அறைகளில் ஒரு மணி நேரத்துக்கு 30 ரூபாய் கொடுத்து நவீன ஏசி தங்குமிடத்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அறையில் ஓய்வெடுக்க 6 மணி நேரத்துக்கு 699 ரூபாய் கட்டணமும் 12 மணி நேரத்துக்கு 999 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது தவிர ஆடைகள் உள்ளிட்ட பைகளை வைக்கும் அறையை 6 மணி நேரத்துக்கு முறையே 10 ரூபாய், 20 ரூபாய், 30 ரூபாய் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
24 மணி நேரமும் பயணிகளின் சிறிய அல்லது பெரியளவிலான உடைமைகளை பாதுகாக்கும் வகையில் 3 மணி நேரத்துக்கு 15 ரூபாய் முதல் 24 மணி நேரத்துக்கு 240 ரூபாய் வரை இந்த லாக்கா் வசதியை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கண்காணிப்புடன் செயல்படும் இந்த டிஜிட்டல் லாக்கரை, ஓடிபி வழியே கைப்பேசி எண் சரிபாா்ப்பின் மூலம் தான் திறக்க முடியும் என்பது தனிச்சிறப்பு.