உதகை செல்ல இன்று 6000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வாரயிறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
நிர்ணயிக்கப்பட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கி முடிக்கப்பட்டதால் புதிதாக வரும் வாகனங்களுக்கு அனுமதியில்லை. இன்று புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இ-பாஸ் கிடைக்காததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர் .
சர்வதேச சுற்றுலா தலங்களாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல்மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதனால் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க, சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது
அதன்படி, கடந்த ஆண்டு மே 7 முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் ஜூன் இறுதி வரை, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் மேலும் ஒரு கட்டுப்பாட்டை கடந்த மாதம் விதித்தது.
இதன்படி ஏப்ரல் 1-ம் தேதியான இன்று, நள்ளிரவு 12 மணி முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். ஆனால் நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ், சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
இதையடுத்து, மாவட்ட எல்லைகள் உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்ளிட்ட 14 சோதனைச் சாவடிகளில் இ-பாஸை தீவிரமாக சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து நீலகிரிக்குள் வரலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இ பாஸ் முறைக்கு வணிகர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பரூக் கூறுகையில்,”இ–பாஸ் நடைமுறை ரத்து, சில்ஹல்லா மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே அறிவித்தது போல், நாளை 2ம் தேதி, 24 மணி நேரம் கடை அடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தம் அனைத்து சங்கங்களின் ஒப்புதலோடு நடக்கும்,” என்றார்.