நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீசார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக போலீசார் சீமானுக்கு அனுப்பிய சம்மனில் குறிப்பிட்டபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் நேற்று மீண்டும் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப். 28-ம் தேதி (இன்று) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸார் நேற்று பிற்பகல் சீமான் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது, சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல்ராஜ், போலீஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் ஒருவழியாக எல்லை பாதுகாப்பு படை வீரர் அமல்ராஜ், மற்றும் சம்மனை கிழித்து சீமானின் உதவியாளர் சுபாகர் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்கவம் நடந்த பிறகு ஓசூரில் சீமான் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் , நான் நிச்சயம் விசாரணைக்கு ஆஜராவேன். ஆனால், கட்டாயப்படுத்தினால் என்னால் காவல் நிலையத்தில் ஆஜராக முடியாது. என்னை என்ன செய்துவிட முடியும். என்றார்.
இன்று காலை சீமானின் வழக்கறிஞர்கள், இன்று மாலை 6 மணிக்கு சீமான் விசாரணைக்கு ஆஜராவார் என தெரிவித்தனர். சீமான் வீட்டில் கைதான இருவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என ஐகோர்ட் மறுத்து விட்டது.
இந்த நிலையில், இன்று தருமபுரியில் பேட்டி அளித்த சீமான், என்னை ஒன்னும் பண்ணமுடியாது. நான் இன்று நேரம் இருந்தால் மாலையில் ஆஜராவேன் என்றார்.
இதற்கிடையே நாதக நிர்வாகிகள், தங்கள் தொண்டர்களை சென்னையில் சீமான் வீட்டு முன்பும், வளசரவாக்கம் போலீஸ் நிலையம் முன்பும் திரளும்படி அழைப்பு விடுத்து திரட்டி வருகிறார்கள்.
இதனால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு வருகிறார்கள். வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வரும் பாதையில் பேரிகார்டு போட்டு போக்குவரத்தை போலீசார் கட்டுப்படுத்தி உள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், சனி, ஞாயிற்று கிழமைகளில் அவர் ஜாமீனில் வரமுடியாது. எனவே இன்று சீமானை போலீசார் கைது செய்வார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து தான் நாதக தொண்டர்களும் சென்னையில் குவிந்து வருகிறார்கள்.