தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிப்பது என்பது அந்தரத்தில் கயிறு கட்டி நடப்பது போன்றது என்று காங்கிரஸ்காரர்களே கூறுவார்கள். சிறிது தவறினாலும் பதவி காலியாகி விடும். இந்த நிலையிலும், கே. எஸ். அழகிரி தாக்குப்பிடித்து தலைவர் பதவியில் இருந்தார். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் கே. எஸ். அழகிரி மாற்றப்பட்டு, செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் 9 இடங்களில் போட்டியிட்டு 9 தொகுதிகளயைும் கைப்பற்றியது. அவர் பதவி ஏற்று ஏறத்தாழ 1 வருடம் ஆன நிலையில் இப்போது செல்வப்பெருந்தகை பதவிக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கட்சி தொடர்பான எந்த ஒரு முடிவு எடுத்தாலும் தனிச்சையாகவே முடிவு எடுப்பதாகவும், கட்சி மூத்த தலைவர்களையோ, முக்கிய நிர்வாகிகளையோ கலந்தாலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக கட்சியில் தற்போது எதிரொலித்து வருகிறது. எனவே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கியாக வேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
செல்வபெருந்தகைக்கு எதிராக கடந்த முறை மக்களவை தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி, டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார், மற்றும் மாணிக்கம் தாகூர் என பல்வேறு மூத்த தலைவர்கள் செல்வப்பெருந்தகைக்கு எதிராக மாவட்ட தலைவர்களை திரட்டி உள்ளனனர் என கூறப்படுகிறது.
அதிருப்தி மாவட்ட தலைவர்கள் அனைவரும் டில்லிக்கு படையெடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து செல்வப்பெருந்தகையை மாற்ற கோரவும் முடிவு செய்தனர்.இதற்காக ஏற்பாடுகள் நேற்று மாலை 22 மாவட்ட தலைவர்கள், ஒரு எம்எல்ஏ என தமிழக காங்கிரஸ் பட்டாளமே டில்லி புறப்பட்டு சென்றது.
அவர்கள் இன்று காலை முதல் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று மதியம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கரை நேரில் சந்தித்து பேசுகின்றனர்.
அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவரை உடனடியாக மாற்றக் கோரியும் மனு ஒன்றை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல இன்னும் இரண்டு நாட்கள் டெல்லியில் முகாமிடவும் திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடமும் செல்வப்பெருந்தகையை மாற்ற கோரும் கோரிக்கையை முன் வைக்க உள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியில், செல்வப்பெருந்தகைக்கு எதிராக மாவட்ட தலைவர்கள் டெல்லிக்கு படையெடுத்திருப்பது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செல்வப்பெருந்தகை ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, காங்கிரஸ் கட்சியில் இதுவெல்லாம் சாதாரணம். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், அவர்கள் தங்களுக்கு , தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இப்போதே தங்களது வேலையை தொடங்கி விட்டனர். செல்வப்பெருந்தகையை இப்போது மாற்றுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. சட்டமன்ற தேர்தல் பணியை தீவிரமாக செய்ய வேண்டிய நேரத்தில்இவர்கள் இப்படி கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கிறார்கள் என்றார்.