காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்துள்ள கர்நாடகா அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, காவிரி நீரைப்பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ் மணியன், பாஜக சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், பாமக சார்பில் ஜிகே.மணி எம்.எல்.ஏ., மற்றும் மமக ஜவாஹிருல்லா, தவாக சார்பில் வேல்முருகன், மு. வீரபாண்டியன், தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ,(இந்திய கம்யூ), நாகை மாலி(மா.கம்யூ) தொல். திருமாவளவன், பாலாஜி எம்.எல்.ஏ(விசிக) ஈஸ்வரன், சூரியமூர்த்தி(கொமதேக), பூமிநாதன்(மதிமுக) மற்றும் அமைச்சர்கள், சட்ட நிபுணர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.