Skip to content

தூத்துக்குடியில் பெண் வெட்டிக்கொலை…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்சள்நீர்காயல் பகுதியைச் சேர்ந்தவர் கனகா. இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கனகாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கனகாவிற்கும் பசுவந்தனையைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை தனியார் பேருந்து மூலம் மஞ்சள் நீர் காயலில் இருந்து தூத்துக்குடிக்கு கனகா வந்துள்ளார். தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். அப்போது மறைந்திருந்த நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக கனகாவை கழுத்தில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கனகாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கனகா வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தென்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!