திருச்சி அருகேயுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் 5 நாள் பன்னாட்டு கருத்தரங்கத்தில் இந்தியா, பிரான்ஸ், பெல்ஜியம், இந்தோனிஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 வாழை ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை மாலை தேசிய வாழை ஆராயச்சி மைய முதன்மை விஞ்ஞானி ஐ. ரவி, தொழில்நுட்ப அலுவலர் கே. காமராஜ் தலைமையில் பிரான்ஸ், பெல்ஜியம், இந்தோனிஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வடுகக்குடியை சேர்ந்த முன்னோடி விவசாயி மதியழகனின் தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் வாழை சாகுபடியை பார்வையிட்டனர். அப்போது, வாழை இலையின் பயன்பாடு, பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் விதம், வாழைத்தார், வாழை மரங்களை பாதுகாக்கும் முறை, வாழைக்கு தேவையான உரங்கள், நுண்ணுட்ட சத்துக்கள் ஆகியவை குறித்து மதியழகன் விளக்கமளித்தார்.
இதுகுறித்து வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பல்வேறு நாடுகளில் வாழை சாகுபடி தொடர்பாக ஆய்வு செய்துள்ளோம். ஆனால், இங்கு தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வாழை இலைகளை மிக அழகாக கத்தரித்து மற்ற இடங்களுக்கு அனுப்பப்படுவவை இங்குதான் பார்க்கிறோம். இங்குள்ள சாகுபடி முறையை எங்களது நாட்டிலும் செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்வோம் என்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதன்மை விஞ்ஞானி ஐ. ரவி கூறுகையில்… நம் நாட்டில் வாழையில் இலை முதல் தண்டு வரை முழுமையாகப் பயன்படுத்துகிறோம். வெளிநாடுகளில் அதிகளவில் பழங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர். எனவே, இங்குள்ள வாழை சாகுபடியில் கையாளும் முறைகள், பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் எதிர்கொள்ளும் முறை உள்ளிட்டவற்றை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொண்டுள்ளனர் என்றார் அவர்.