Skip to content

1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள்…..திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி

  • by Authour

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான  தியாகபிரம்மம் தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி  தஞ்சை மாவட்டம் திருவையாறில் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள்  வாய்ப்பாட்டு பாடியும்,  இசைக்கருவிகள் கொண்டும்  சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  பஞ்சரத்ன கீர்த்தனை இன்று காலை நடந்தது.

இந்த விழாவை தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என். ரவி இன்று  காலை 7.45 மணிக்கு தொடங்கி வைத்தார். ஸ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதசுரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து காலை 9 மணியளவில் பிரபஞ்சம் எஸ். பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக…’ என்ற பாடல் பாடப்பட்டது. இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு…’ ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!