Skip to content
Home » குழந்தையுடன் சென்று கோரிக்கை வைத்த டிரைவர்….உடனே நிறைவேற்றிய அமைச்சர்

குழந்தையுடன் சென்று கோரிக்கை வைத்த டிரைவர்….உடனே நிறைவேற்றிய அமைச்சர்

கோவையில் நேற்று நடந்த  விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன், அமைச்சரின் காலில் விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த அதிகாரிகள் குழந்தையை கையில் எடுத்தனர். அதன் பின்னர் அமைச்சரிடம் தனக்கு பணியிட மாறுதல் கேட்டு கண்ணன் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து டிரைவர் கண்ணன் கூறுகையில், எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே எனது இரண்டு பெண் குழந்தைகளையும் எனது தாய், தந்தையர் தான் பார்த்துக் கொள்கின்றனர்.

எனது பெற்றோர்களுக்கும் வயது காரணமாக குழந்தைகளை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதால் சொந்த ஊரில் இருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளது. எனவே எனக்கு சொந்த ஊரான தேனிக்கு பணி மாறுதல் வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். இதுகுறித்து பலமுறை பொது மேலாளரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் கடைசியாக அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்துள்ளேன். எனக்கு இது தவிர வேறு வழி தெரியவில்லை. எனது பிரச்சினை குறித்து பேசி தீர்வு காணப்படும் என அமைச்சர் கூறியது ஆறுதல் அளிக்கிறது என்று கூறினார்.
இந்த நிலையில் டிரைவர் கண்ணனின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு இன்று அவருக்கு தேனிக்கு பணியிட மாற்றம் உத்தரவு வழங்கப்பட்டது. இதையொட்டி கண்ணன்,  அமைச்சர் சிவசங்கருக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!