உலக ஹீமோபிலியா தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த கையேடு மற்றும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பனியன் மற்றும் பயனாளிகளுக்கு மருந்துகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. ஹீமோபிலியா நோய் என்பது இரத்தம் உறைதல் ஆகும். இது இரத்தக் கட்டிகளை உருவாக்கும் உடலின் திறனைக் குறைக்கிறது, இது இரத்தப்போக்கு நிறுத்தப்படுவதற்குத் தேவையான செயல்முறையாகும்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசியதாவது. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 45 முதல் 50 நோயாளிகள் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த நோய்க்கு தேவையான விலை உயர்ந்த மருந்துகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 2 முதல் 2.5 கோடி ரூபாய் வரை இதற்காக தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இந்த நோய் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஆரம்ப காலத்தில் இருந்தே இதற்கு சிகிச்சை பெற்றுக் கொண்டால் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இதனை குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது உரிய முறையில் பரிசோதனை செய்து இந் நோயில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்கலாம். இது ஒரு பிறவி நோய். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ஆறுமுகம், மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, பொது மருத்துவ துறை தலைவர் கண்ணன், நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், முகமது இத்ரீஸ் ஆகியோர் பேசினர். டாக்டர் ஜீவானந்தம், ஹீமோபிலியா நோயாளிகளுக்கு பாதுகாப்பு முறைகள் பற்றி விளக்கம் அளித்தார். திருச்சி காவேரி மருத்துவமனை ரத்த சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பையா தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களுக்கு ஹீமோபிலியா நோய் சிகிச்சை முறைகள் பற்றி விளக்கி கூறினார்.