தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பூசத் திருவிழா. இந்த விழா இன்று தமிழகத்தின் அனைத்து முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் இந்த விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இங்கு தைப்பூசத்திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று இரவு நடந்தது. தைப்பூசத்தின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை 4.45 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து 14ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். அன்றிரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.
தைப்பூசத் திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பழநி நகரை நோக்கி வந்து கொண்டுள்ளனர். இதனால் பழநி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தாராபுரம் மற்றும் உடுமலை சாலைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிக்கின்றனர். அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுமார் 5மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.