கோவை, பொள்ளாச்சி அடுத்த பழனியூரில் அறநிலைத்துறைக்கு சொந்தமான மாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம் போல கோயிலில் பணியாற்றி வரும் பூசாரியான கணேசன் என்பவர் கோவிலை திறந்து அன்றாட பணிகளை மேற்கொண்டு உள்ளார். அப்போது கோயில் கிணற்றில் பெண் ஒருவர் சடலமாக மிதப்பதை கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இது குறித்து கோட்டூர் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோட்டூர் பகுதியில் வசித்து வந்த 59 வயதான தங்கம்மாள், தனது கணவர் மற்றும் மகளை இழந்து அதே பகுதியில் வசித்து வந்ததாகவும், திடீரென அவர் காணாமல் போனதால் அவருடைய
தங்கையான லட்சுமி கோயில் உள்ளிட்ட பல இடங்களில் அவரை தேடி உள்ளார்.ஆனால் தங்கம்மாள் கிடைக்கவில்லை.இந்நிலையில் மாகாளியம்மன் கோயில் கிணற்றில் சடலமாக இருந்தது தங்கம்மாள் தான் என அவருடைய தங்கை உறுதி செய்தார். மேலும் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தங்கம்மாள், 20 வருடத்திற்கு முன்பு அவருடைய மகள் விழுந்து இறந்த அதே கிணற்றில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார்.
தங்கமாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட மாகாளியம்மன் கோயில் கிணற்றில் கடந்த 20 வருடங்களாக சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 12 பேர் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு கம்பி வேலி அமைத்து கோயில் கிணற்றை பாதுகாப்பு செய்ய வேண்டும் என தபால் மூலம் காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.