நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் மீன்பிடி சீசன் நடைபெற்று வருகிறது பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் கோடிக்கரையில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது படகில் செந்தில்குமார் சிவக்குமார் ,மதன் மற்றும் நித்தியானந்தம் ஆகிய நால்வர் நேற்று மதியம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இன்று அதிகாலை இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை உருட்டு
கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி மீனவர்கள் வைத்திருந்த மீன்கள், மீன் பிடி வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை அபகரித்து சென்றுள்ளனர். காயமடைந்த மீனவர்கள் கோடிக்கரை மீன் பிடி படகு துறைமுகத்திற்கு வந்து கோடிக்கரைஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று வேதாரண்யம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செந்தில் குமார் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மதன் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அழைத்துச் செல்லப்பட்டனர்.